Thursday, April 14, 2011

சின்னக்குயிலின் செல்லக்குயில் மறைந்தது...


கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது செவிகளை, இன்னிசையால் நிறையச் செய்துகொண்டிருந்த சின்னக்குயில் சித்ரா அவர்களின் செல்லமகள் பரிதாபமாக மரணமடைந்தது கேட்டு, மிகுந்த துயரமடைகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியம் பெற்று, ஆசை ஆசையாய் வளர்த்துக்கொண்டிருந்த வேளையில் அந்தக் குழந்தையையும் இறைவன் பறித்துக்கொண்டது தாங்கொணாத் துயரம்தான். இதிலிருந்து அவர் எப்படி மீளப்போகிறார் எனத் தெரியவில்லை. ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், சித்ரா அவர்கள் மீண்டு வரவும் இறைவனிடம் வேண்டுவது, நமது கடமையென நினைக்கிறேன்.

Sunday, April 3, 2011

ஆரோக்கியமான வளர்ச்சியில் கிரிக்கெட்...

2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அனைவருக்கும் பல உண்மைகளைச் சொல்லிச் சென்றுள்ளது. நேற்றைய இறுதிப்போட்டியில் ஆடிய அனைவருக்கும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையை விட மற்றொன்று உந்துதலாக அமைந்ததென்றால் அது மிகையல்ல.. எப்படியேனும் போராடி உலகக்கோப்பையை வென்று சச்சினுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான். சச்சின் எனும் அந்த மாமனிதனின் 20 ஆண்டுகால கடின உழைப்புக்குக் கிடைத்த மபெரும் கௌரவம் அது. ஒரு மனிதன் பலனை எதிர்பாராமல் உழைத்தால் அதற்குரிய கௌரவம் அவனை நிச்சயம் வந்தடையும் என்பதற்கு இந்த உலகக்கோப்பை ஒரு எடுத்துக்காட்டு. கடின உழைப்பும் ஒழுக்கமும் அவரை இந்த உச்ச நிலையை அடையச் செய்திருக்கிறது.

எந்த உலகக் கோப்பையிலும் கண்டிராத அற்புதங்கள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடந்தன. முன்பு சச்சின், கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாக் போன்ற ஒரு சில வீரர்களே கள நன்னடத்தையில் சிறந்தவர்களாக விளங்கினர். ஆனால் இந்த உலகக்கோப்பையில் பல வீரர்கள் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் மனம் புண்படுமாறு வெளிப்படுத்தவில்லை.. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், அவுட் என்று தெரிந்ததும் தாமாகவே சச்சின் வெளியேறி தனது பெருமையைத் தக்கவைத்துக் கொண்டார். அரையிறுதிப் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு பாராட்டும்படி அமைந்தது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் சங்ககரா அவுட் என்று தெரிந்ததும் அம்பயரைக் கவனிக்காமல் தாமாகவே வெளியேறினார். மேலும் இந்திய அணியினரின் கூட்டுமுயற்சி பாராட்டும்படியாக இருந்தது.. ஹோக்லி, கம்பீர், தோனி, யுவராஜ், ரெய்னா, சேவக் (முதல் கேட்ச்), இவற்றில் ஒரு தவறு நிகழ்ந்திருந்தால்கூட வெற்றிகிடைத்திருப்பது கடினம்தான். ஆட்டம் முடிந்தவுடன் தெண்டுல்கரை தோளில் சுமந்துகொண்டு மைதானத்தை வலம் வந்தது, கேரி கிறிஸ்டனை தோளில் சுமந்து வந்துது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்டம் முடிந்து முரளிதரன் பெவிலியன் திரும்பியபோது இந்திய ரசிகர்கள் எழுந்துநின்று அவரைப் பெருமைப்படுத்தினார்கள். அது இந்திய ரசிகர்களுக்குரிய தனிப்பட்ட உயர்ந்த குணமாகவே கருதுகிறேன். முரளிதரன் பரிசு பெற வரும்போது இந்திய வீரர்கள் அனைவரும் அவரை தைதட்டி வரவேற்றார்கள். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான தோனி கோப்பையைப் பெற்ற சில விநாடிகளில் அணி வீரர்களிடம் கொடுத்து அழகு பார்த்தார். இவையெல்லாம் ஆரோக்கியமான வளர்ச்சியில் கிரிக்கெட் சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

Friday, March 11, 2011

உன் நினைவில்லாத
ஒரு நிமிடம்
என் மரணத்தைக்
கடந்ததாய் இருக்கும்...

நீ என்னை நினைக்கும்
ஒரு நிமிடத்தையும்
நிறுத்திவிட்டால் - என்
மனமெப்படி பொறுக்கும்...
- விஜய. மாதவன்.